பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்கள் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆர்ஸ்தீப் சிங் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகவில்லை, மேலும் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் உடன் நெருக்கமாக பணியாற்றினார். இதனால், வரவிருக்கும் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இந்தியா இதுவரை எட்ஜ்பாஸ்டனில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவில்லை.

ஜஸ்ப்ரீத் பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அர்ஷ்தீப் தனது முதல் டெஸ்ட் தொப்பியைப் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஆர்ஸ்தீப், இந்தியாவுக்காக முக்கிய பங்காற்றியவர்.
இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளவர். கவுண்டி கிரிக்கெட்டில் ஆர்ஸ்தீப் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதே போன்று பயிற்சி முகாமில், பும்ராவும் பிரசித் கிருஷ்ணாவும் மைதானத்தில் இருந்தனர். ஆனால் பயிற்சியில் பங்கேற்கவில்லை.
பும்ரா முன்னதாக இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறியிருந்தார், 2022-ல் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவை தலைமையேற்று வழிநடத்தினார். அங்கு இங்கிலாந்து 378 ரன்கள் இலக்கைத் துரத்தி அபார வெற்றியைப் பெற்றது. இதனிடையே, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், முகமது சிராஜுக்கு பேட்டிங் பயிற்சி அளித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியாவின் கீழ் வரிசை பேட்டிங் சரிவு தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால், இந்திய அணி எட்ஜ்பாஸ்டனில் தங்கள் கீழ் வரிசை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதே போன்று கருண் நாயர், சாய் சுதர்சனும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளனர். தற்போது, இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.