கொல்கத்தா: வெறும் இரண்டரை ஆண்டுகளில் ஒரு பந்துவீச்சாளர் இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்களை வீழ்த்தியவராக மாறி இருக்கிறார். இந்த நம்ப முடியாத சாதனையை செய்திருப்பது வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்திய போது அவர் இந்த சாதனையை செய்தார்.
அவர் 2022 ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகம் ஆனார்.அப்போது முதல் 61 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 97 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன் யுஸ்வேந்திரா சாஹல் 96 விக்கெட்களை வீழ்த்தியதே இந்திய அணிக்காக ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் அர்ஷ்தீப் சிங்.

மேலும், தற்போது ஜாம்பவான் ஒருவருக்கு இணையாக சாதனைப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக அனில் கும்ப்ளே இருக்கிறார். ஒருநாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக அனில் கும்ப்ளே இருக்கிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக அர்ஷ்தீப் சிங் இருக்கிறார். அந்த வகையில் அவர் ஜாம்பவானுக்கு நிகராக அதிக விக்கெட் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அர்ஷ்தீப் சிங்கிற்கு தற்போது 25 வயது தான் ஆகிறது. இப்போதே அவர் 97 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
அர்ஷ்தீப் சிங் மேலும் 5 ஆண்டுகள் இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம் பெறும் பட்சத்தில் நம்ப முடியாத அளவுக்கு விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
டி20 போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கைக்கு உரிய வேகப் பந்துவீச்சாளராகவும் அவர் உருமாறி இருக்கிறார். அடுத்து இந்திய ஒருநாள் அணியிலும் அவர் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு அடுத்ததாக நம்பிக்கைக்கு உரிய வேகப் பந்துவீச்சாளராகவும் பெயர் பெற்று இருக்கிறார்.