கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இந்த டி20 தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்வார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷமி களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

அர்ஷ்தீப் சிங் ஏற்கனவே இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் 95 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். யுஸ்வேந்திர சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்களை வீழ்த்தியதே ஒரு இந்திய பந்துவீச்சாளர் சர்வதேச டி20 போட்டிகளில் வீழ்த்திய அதிக விக்கெட் எண்ணிக்கை ஆகும்.
அர்ஷ்தீப் சிங் இன்னும் 2 விக்கெட்களை வீழ்த்தினால் அந்த சாதனையை முறியடிப்பார்.
இன்னும் 5 விக்கெட்களை வீழ்த்தினால் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்வார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்குள் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களை வீழ்த்தி விட்டால் சர்வதேச அளவில் விரைவாக 100 டி20 விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பார்.
ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 53 டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி வேகமாக 100 சர்வதேச டி20 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார். நேபாள அணியின் சுழற் பந்துவீச்சாளர் சந்தீப் லாமிச்சேன் 54 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கையின் வனிந்து அசரங்கா 63 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது அர்ஷ்தீப் சிங் அடுத்த மூன்று டி20 போட்டிகளுக்குள் இந்த மைல்கல் சாதனையை செய்தால் சர்வதேச அளவில் வேகமாக 100 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிப்பார். மேலும், இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்வார்.