விசாகப்பட்டினம் : சீனியர் வீரர்கள் இல்லையென்றாலும் இந்திய அணியின் பலம் சிறிதளவும் குறையவில்லை என்று விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். காயம் காரணமாக சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் விலகிய நிலையில், அவர்களின் இடத்தை இளம் வீரர்கள் நிரப்ப தயாராகி வருகின்றனர்.

அதேபோல் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் முதல்முறையாக சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து கேஎஸ் பரத் பேசுகையில், இந்திய அணிக்காக விளையாடும் போது வெளியில் இருந்து அதிகளவு விமர்சனங்கள் வரும். ஆனால் வீரர்கள் விமர்சனங்களுக்கு கவனம் கொடுக்காமல், போட்டியில் கவனத்தை வைக்க வேண்டும்.
சொந்த மண்ணில் சொந்த மக்கள் முன் களமிறங்க போவது பெருமையாக உள்ளது. ஆனால் இந்த போட்டியில் எங்களின் கவனம் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை எப்போதும் மிகச்சிறப்பாக கம்பேக் கொடுக்கும். இந்த நீண்ட டெஸ்ட் தொடரில் நிச்சயம் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், ஓய்வறை சூழலில் எந்த மாற்றமும் இல்லை. சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் எங்களிடம் பதற்றமே தேவையில்லை என்று அமைதிபடுத்தினார்கள்.
அடுத்தடுத்த போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதில் கவனத்தை குவிக்க வேண்டும் என்று கூறினார்கள். அதேபோல் முதல் போட்டிக்கு முன்பாகவே நாங்கள் சில ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களுக்கு பயிற்சி மேற்கொண்டோம். ஆனால் அதனை யாரும் களத்தில் செயல்படுத்தவில்லை. இந்திய மண்ணில் எப்படியான கிரிக்கெட்டை நாம் விளையாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். சூழலுக்கு ஏற்றபடி தான் பேட்ஸ்மேன்கள் முடிவு செய்கிறார்கள்.
மேலும், கேஎல் ராகுல், ஜடேஜா, விராட் கோலி இல்லாமல் களமிறங்கிறோம். நிச்சயமாக அனுபவம் முக்கியம் தான். ஆனால் இளம் வீரர்களான நாங்கள் ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இந்திய அணியின் இளம் வீரர்கள் அனைவருமே சவாலுக்கு தயாராக இருக்கிறார்கள். நிச்சயம் நாளைய ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.