லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடாத போது, இந்திய அணி குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் தொடர்ச்சியாக கூறி வந்தார். ஆனாலும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை சேர்க்கப்படவில்லை. இதனால் சுப்மன் கில் - கம்பீர் கூட்டணியை இந்திய அணி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் போப் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.

இதன்பின் இந்திய அணி தரப்பில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது கருண் நாயர், துருவ் ஜுரெல், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய 4 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு அவரது இடத்தில் கருண் நாயரை இந்திய அணி கொண்டு வந்திருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
முதல் டெஸ்ட் போட்டி முதலே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இருக்க வேண்டும் என்று அஸ்வின் தொடர்ச்சியாக பேசி வருகிறார். குல்தீப் யாதவின் பவுலிங்கில் சில ரன்கள் அதிகமாக சென்றாலும், ஒவ்வொரு பந்துக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கூடுதல் எச்சரிக்கை இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் கைகளில் இருந்து குல்தீப் யாதவ் பந்தை கணிக்கவே முடியாது.
குல்தீப் யாதவின் பந்துகள் பிட்சான பின்ன்னரே, எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதை கணிக்க முடியும். இப்படியான ஒரு ஸ்பின்னரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக விக்கெட் டேக்கரான பும்ரா இல்லாத நேரத்தில் குல்தீப் யாதவை கொண்டு வர சுப்மன் கில் - கம்பீர் கூட்டணி முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
ஆனால் கடைசி வரை அஸ்வினின் ஆலோசனையை சுப்மன் கில் - கம்பீர் கூட்டணி ஏற்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வருகிறார். இங்கிலாந்து அணி இந்தியா வந்த போதும், குல்தீப் யாதவ் அற்புதமாக செயல்பட்டிருந்தார். ஆனாலும் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.