மும்பை: 2026 ஐசிசி டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் பரபரப்பான மோதலில், அக்சர் படேல் மற்றும் சிவம் தூபே இணைந்து பிடித்த மிரட்டலான கேட்ச், வில் ஜாக்ஸின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில், வில் ஜாக்ஸ் பந்தை ஸ்வீப்பர் கவர் திசை நோக்கி அடித்தார். அப்போது, நீண்ட தூரம் ஓடிவந்த அக்சர் படேல், பந்தைப் பிடித்தார். ஆனால், தாம் பவுண்டரி லைனை கடந்து விடுவோம் என்று உணர்ந்து, பந்தை அருகிலிருந்த சிவம் தூபேவிடம் அழகாகத் தட்டிவிட்டார். தூபே அதனை மிக லாவகமாகப் பிடித்தார். இந்த அசாத்தியமான கேட்ச் தான், வில் ஜாக்ஸ் ஆட்டமிழக்கக் காரணமாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல் வேக ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த சாம்சன், தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளையும் 7 சிக்ஸர்களையும் விளாசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணியின் பெரிய ஸ்கோரை உறுதி செய்தது.

அபிஷேக் ஷர்மா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, சஞ்சு சாம்சன், இஷான் கிஷனுடன் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தார். இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். பின்னர் சிவம் தூபே 25 பந்துகளில் 43 ரன்கள் விளாச, சாம்சன் 26 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்து, தொடரில் இரண்டாவது முறையாக இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஃபில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களும், திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்களும் குவித்து, இந்திய அணியின் ஸ்கோரை 250 ரன்களைத் தாண்ட உதவினர். இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
254 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பவர்பிளேயின் போது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக, 6 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களுடன் நெருக்கடியில் சிக்கியது.
எனினும், பெத்தேல் ஒருபுறம் சதம் அடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். ஜோஸ் பட்லர், டாம் பேன்டன், வில் ஜாக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகியோருடன் இணைந்து அவர் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்து, வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து அணி வெற்றி அருகே வரை சென்றது,
சாம் கரணை 19வது ஓவரில் பாண்டியா அவுட்டாக்கியது, இங்கிலாந்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பெத்தேலின் சிறப்பான ஆட்டத்தையும் மீறி, கடைசி ஓவரில் பும்ரா, பாண்டியா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பெத்தேல் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு தகர்ந்தது.

இறுதியில், ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் அக்சர் பட்டேல் பிடித்த அந்த ஓரு கேட்ச் தான் போட்டியை தலைக்கீழ் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்து அணியை வரும் 8ஆம் தேதி எதிர்கொள்ளும்.