கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் அக்சர் பட்டேல் நம்ப முடியாத பவுலிங் செயல்பாட்டை செய்து காட்டினார். இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அப்போது அக்சர் பட்டேல் ஏழாவது ஓவரில் முதன்முறையாக இந்த போட்டியில் பந்து வீச வந்தார். அந்த ஓவரில் அவர் இரண்டு சிக்ஸ் உட்பட 15 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதன் பின் அவருக்கு தொடர்ந்து ஓவர் வழங்கப்படவில்லை. பின்னர் 14 வது ஓவரை வீசினார் அக்சர். அப்போது 3 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து 16 வது ஓவரில் ரன் ஏதும் விட்டுக் கொடுக்காமல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 18 வது ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் நான்கு ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் அக்சர் பட்டேல்.
முதல் ஓவரில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்த அக்சர் பட்டேல், அடுத்த மூன்று ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியது நம்ப முடியாத செயல்பாடாக இருந்தது. இதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.
இதே போட்டியில் ஹர்திக் பாண்டியா முதல் இரண்டு ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். அதன் பின்னரும் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். நான்கு ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார் ஹர்திக் பாண்டியா. அதனுடன் ஒப்பிடும்போது அக்சர் பட்டேலின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோஸ் பட்லர் தனி ஆளாக போராடி 44 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். அடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 12.5 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து இருந்தார்.