மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 41 ரன்களை தான் சேர்த்தார். ஆசிய மைதானங்களில் சிறப்பாக விளையாடினாலும் வெளிநாடுகளில் ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பி வருவது தொடர்கதையாகி வருகிறது. இவருக்காக ஃபார்மில் இருந்த ரஹானேவை இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்திருந்தது.

ஆனால் தென்னாப்பிடிக்கா டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. குறிப்பாக ஷாட் தேர்வில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இதனை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் நேரடியாகவே ஸ்ரேயாஸ் ஐயரிடம் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இளம் வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.
ஏனென்றால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா வந்த நிலையில், ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். ஆனால் பிசிசிஐ உடனடியாக ஸ்ரேயாஸ் ஐயரை கண்டித்ததன் காரணமாக, ஜனவரி 12ஆம் தேதி நடக்கும் ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ரிசர்வ் வீரராக ரிங்கு சிங் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது சில ஓவர்கள் ஃபீல்டிங் செய்த ரிங்கு சிங், பேட்டிங் பயிற்சியிலும் அதிக ஈடுபாட்டுடன் இருந்திருக்கிறார். இதன்பின் சொந்த ஊர் திரும்பிய ரிங்கு சிங், நேரடியாக உத்தரப் பிரதேச அணிக்காக ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சில ரன்களில் சதத்தை மிஸ் செய்த ரிங்கு சிங், அடுத்தடுத்து ஆர்வமுடன் ரஞ்சி போட்டிகளில் ஆடி வருகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிங்கு சிங்கை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை இருக்கும் சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.