லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்சில் வெறும் 193 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனினும் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜா என்ற தொடரில் நான்காவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அதுமட்டுமில்லாமல் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ஜடேஜா மட்டும் 181 பந்துகளை எதிர் கொண்டு 61 ரன்கள் சேர்த்து தனி ஆளாக போராடினார். அவருக்கு பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் துணை நின்றனர். எனினும் இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பலரும் ஜடேஜா அதிரடியாக ஆடாமல் போனதே காரணம் என்று குறை கூறினர்.

இதனால் கம்பீர் இந்த போட்டிக்குப் பின்பு என்ன சொல்லி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இது தொடர்பாக பிசிசிஐ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஜடேஜா, இந்திய அணியில் மிக மதிப்பு மிக்க வீரர் என்ற டைட்டிலை பிசிசிஐ கொடுத்திருக்கின்றது.
அந்த வீடியோவில் போட்டிக்கு பிறகு கம்பீர் பேசிய காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதில் ஜடேஜா மிகவும் அபாரமாக களத்தில் நின்று போராடினார். அவருடைய இந்த செயல்பாட்டு பிரமிக்கும் வகையில் இருந்தது என்று அவரை பாராட்டி இருக்கிறார். இதேபோன்று அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் கில், ஜடேஜா போல் பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என மூன்று பிரிவிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினம்.
ஜடேஜா இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோட்டாக், ஜடேஜாவால் எப்போதுமே அழுத்தத்தை சிறப்பாக கையாள முடியும். அந்த தகுதி அவரிடம் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கின்றார்.
ஒவ்வொரு நெருக்கடியான கட்டத்திலும் அணிக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு அவர் செயல்படுவார்.
அவர் அணியில் இருப்பது அணிக்கு மிகவும் சிறந்த விஷயமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஜடேஜா போல் ஒரு சிறந்த வீரரை அணியில் தேர்வு செய்வதில் கடினம். அவர் அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டமான விஷயமாக பார்க்கின்றோம். அது மட்டுமில்லாமல் எங்களுக்கு அவர் எப்போதும் வழிகாட்டியாக இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.