லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கின்றது. இது அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதால் இது டி20 போட்டியையே மிஞ்சும் அளவுக்கு அமைந்திருக்கின்றது.
இந்த தருணத்தில் இரு அணிகளும் முதலில் 387 ரன்கள் அடித்திருப்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடிக்கும் ஸ்கோரை விட இந்திய அணி ஒரு ரன் கூடுதலாக அடிக்க வேண்டும். இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளனர்.

தற்போது நான்காவது நாள் ஆட்டம் தான் நடைபெறுகிறது என்பதால் 300 ரன்கள் குவித்து விட்டு கடைசி நாள் அன்று இந்தியாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்க இங்கிலாந்து முடிவு எடுத்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவின்போது போட்டியை தாமதப்படுத்துவதற்காக இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட செயலுக்கு இந்திய வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் களத்தில் மோதிக் கொள்ளும் சம்பவம் நடந்தது. இதனால் நான்காவது நாள் ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்றது. ஆரம்பம் முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஆபத்தாக விளங்கிய பென் டக்கட் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருந்தது.
இந்த சூழலில் பென் டக்கட் 12 ரன்கள் எடுத்திருந்தபோது, அடித்த ஆட முற்பட்டு சிராஜ் பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் ஆனார். இதனை அடுத்து சிராஜ் பென் டக்கட்டை பார்த்து ஆக்ரோஷமாக கத்தினார். இதனால் கோபம் அடைந்த பென் டக்கட் பெவிலியனுக்கு செல்லும் வழியில் நேராக சிராஜை தோளுடன் தோள் மோதிக் கொண்டு சென்றார்.
இதனை அடுத்து நடுவர் உடனடியாக வந்து சிராஜை கண்டித்தார். ஆனால் இதன் ரிப்ளேவை பார்க்கும் போது பென் டக்கட் தான் சிராஜை நோக்கி சென்று அவரை மோதியது தெரிய வந்தது. இதன் மூலம் சிராஜ் மற்றும் பென் டக்கட் இருவருக்கும் அபராதம் அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.