பிர்மிங்காம்: இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எந்த இடத்தில் தவறு செய்தோம் என சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். முதலில் இந்திய அணி தடுமாறிய போது அதைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தப் போட்டி பற்றி பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: "இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. நாங்கள் இரண்டு இடங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதுதான் எங்கள் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அப்போது அவர்களின் பின்வரிசையை எங்களால் விரைவாக வீழ்த்த முடியவில்லை.

அதன் பிறகு நாங்கள் முதலில் பேட்டிங் ஆடியபோது 80 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து இருந்தோம். இந்தியாவின் பெரிய இன்னிங்ஸ்க்கு அங்கிருந்து எங்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தின் துவக்கத்தை எடுத்துப் பார்த்தால், 200 ரன்களுக்கு 5 என்ற இடத்தில் நாங்கள் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்க வேண்டும். அப்போது இந்தப் போட்டி வேறு மாதிரியாக மாறி இருக்கும்.
இந்தப் போட்டி ஆழமாகச் செல்லச் செல்ல இந்திய அணிக்கு சாதகமாக இது மாறியது என்பதுதான் உண்மை. நாங்கள் 80 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததற்குப் பிறகு எங்களால் முடிந்த அத்தனையையும் செய்தோம். அணியின் திட்டத்தை மாற்றினோம். அணிக்காக அனைத்தையும் செய்தோம்.
ஆனால், இந்திய அணி தரமான அணியாக இருந்தது. உங்கள் எதிரணியில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தால், அதை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினம். சுப்மன் கில் பேட்டிங்கில் நம்ப முடியாத ஆட்டத்தை ஆடினார்.
ஆடுகளத்தில் அதிக நேரம் செலவிட்டது எங்கள் உடல் மற்றும் மனதை மிகவும் சோர்வடைய வைத்தது. ஜேமி ஸ்மித் அபாரமாக ஆடினார். அவர் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டார். அவரது இயல்பான ஆட்டத்தை ஆடினார். ஹாரி ப்ரூக் இந்திய அணியை எதிர்த்துப் போராடினார். நாங்கள் இங்கு நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் அவ்வாறு நாங்கள் செய்ய வேண்டும்," என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.