லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குறித்து முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று ஹெடிங்லே மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற பிறகு பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த நிலையில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும் என மைக்கேல் வாகன் தற்போது விமர்சனம் செய்திருக்கிறார்.

ஏனெனில், இந்திய அணி முதல் நாள் அன்று மூன்று விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் சேர்த்தனர். சாய் சுதர்சன் மட்டுமே ரன் ஏதும் எடுக்கவில்லை. கே.எல். ராகுல் 42 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்தனர். சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் முதல் நாள் முடிவில் ஆடுகளத்தில் இருந்தனர்.
இதைச் சுட்டிக்காட்டிய மைக்கேல் வாகன், "லீட்ஸ் மைதானத்தில் நேற்று வெயில் நன்றாக அடித்துக் கொண்டிருந்த நிலையில், நாம் எளிதாக பேட்டிங் செய்யலாம் என்று முடிவை எடுத்து இருக்க வேண்டும். அங்கு பிட்ச் நன்றாகக் காய்ந்து பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது" என்றார்.
"முதலில் பந்துவீசுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தபோது நான் ஆடிப் போனேன். டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வது தான் வழக்கம். இதுவரை இருந்து வந்த வழக்கத்தை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசி இருக்கிறார்கள். சமீப காலத்தில் இங்கிலாந்து அணி சேஸிங் செய்து பல போட்டிகளை வென்றிருக்கிறது என்பதை நான் அறிவேன்."
"ஆனால், இந்தத் தருணத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும். நீங்கள் ஓராண்டுக்கு முன்பு, இரண்டு ஆண்டுக்கு முன்பு, மூன்று ஆண்டுக்கு முன்பு வெற்றி பெற்றீர்கள் என்பதை வைத்து இன்று ஒரு முடிவை எடுக்க முடியாது."
"மேலும், இந்திய அணியின் இளம் பேட்டிங் வரிசையை நன்கு விளையாட விட்டு இருக்கிறார்கள். அந்த அணியின் இளம் கேப்டனை எளிதாக ஆடவிட்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியின் வீரர்களைப் பார்த்தால் அந்த அணியின் பலம் பேட்டிங் வரிசையில்தான் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் தனது உள்ளுணர்வை வைத்து இந்த முடிவை எடுத்து இருக்கிறார்" என்று மைக்கேல் வாகன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.