லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் போட்டி சமனில் முடிவடைந்தது. இதில் ராகுல், கில், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக விளையாடினர்.
ராகுல் 10 ரன்களில் சதத்தை தவறவிட்ட நிலையில் மற்ற மூன்று வீரர்களும் அபாரமாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார்கள். இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் கடைசி நாள் ஆட்ட நேரத்தில் போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்வதற்காக கேப்டன் ஸ்டோக்ஸ், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரிடம் கைகுலுக்க சென்றார்.

அப்போது இருவரும் சதத்தை நெருங்கி வந்தனர். ஆனால் ஸ்டோக்ஸ் இன் இந்த கோரிக்கையை ஜடேஜா நிராகரித்தார். அப்போது இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டு கிண்டல் செய்தார்கள்.
இது ஸ்டோக்ஸ் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. போட்டி டிராவில் முடிவடைவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஸ்டோக்ஸ் இவ்வாறு செய்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து முதல்முறையாக தன்னுடைய மௌனத்தை கலைத்த ஸ்டோக்ஸ், ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் தன்னுடைய சதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்ததை நான் புரிந்து கொள்கின்றேன்.
என்னை பொறுத்தவரை எங்கள் அணி பவுலர்கள் அதிக ஓவர்கள் வீசி விட்டார்கள். இதனால் போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்வதற்காகத்தான் நான் டிராவை முடிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த சம்பவம் முடிவடைந்துவிட்டது. நாங்கள் அதை விட்டு கடந்து வந்து விட்டோம்.
இந்திய வீரர்களும் அதிலிருந்து கடந்து விட்டார்கள். எனவே அந்த 20 நிமிடத்தில் நடந்த விஷயத்தை யாரும் கவனம் செலுத்த வேண்டாம். ஏனென்றால் இது ஒரு சிறந்த தொடராக எங்களுக்கு அமைந்து இருக்கின்றது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இந்த தொடர் எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து இருக்கின்றது.
உடல் தகுதியையும் எங்களுடைய குணாதிசயங்களையும் சோதிக்கும் வகையில் இந்த தொடர் இருந்தது. இரு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டோம். இதன் மூலம் எங்கள் இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசிக்கின்றோம் என்பது புரியும். கம்பீர் மற்றும் கள பராமரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அங்கு இல்லை என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.