லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கின்றது. லண்டன் ஓவல் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வானமும் மேகமூட்டத்துடன் இருப்பதால் முதலில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்.
இதன் காரணமாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஆலி போப், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வானம் மேகமூட்டத்துடன் இருக்கின்றது. ஆடுகளத்தை பார்க்கும் போது பந்து வீசுவது தான் சரியான முடிவாக இருக்கும். எங்கள் அணியின் கேப்டனை நாங்கள் இழந்து விட்டோம்.

ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார்கள். எங்கள் அணியின் ஓய்வில் இருந்த பல வீரர்கள் வந்திருக்கின்றார்கள்.எங்கள் அணியின் பேட்டிங்கும் பலம் வாய்ந்ததாக இருக்கின்றது. பவுலர்களான அட்கின்சன், ஜெமி ஓவர்டன் ஆகியோர் கூட ரன்கள் சேர்ப்பார்கள். நாங்கள் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் முடிக்க விரும்பவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம் என்று ஆலி போப் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அதனால் டாசை இழந்தது குறித்து எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்றால் என்ன செய்வது என்ற குழப்பம் எனக்கு இருந்தது. ஆடுகளம் நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கின்றது.
இதனால் முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் அடிக்க நாங்கள் முயற்சி செய்வோம். பவுலர்களுக்கு இது நல்ல ஆடுகளமாக இருக்கும் என நம்புகின்றேன். எங்கள் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பந்துக்கு பதிலாக சர்துல் தாக்கூர் விளையாடுகின்றார்.
பும்ராவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் அணிக்கு திரும்பி இருக்கின்றார். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். ஒவ்வொரு வீரர்களும் கூடுதலாக வெற்றிக்கு பங்களிக்க முயற்சி செய்ய வேண்டும். அதை எங்கள் வீரர்கள் செய்வார்கள் என நம்புகிறேன் என்று கில் கூறியுள்ளார்.இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங், ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்கள் உள்ள நிலையில் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்து கில் தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.