லீட்ஸ்: இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீசும் அணி அதிக வெற்றிகளை சமீப காலமாக பெற்று இருக்கிறது.
இது இங்கிலாந்துக்கு சாதகமான டாஸ் ஆக பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நாங்கள் முதலில் பந்து வீசுகின்றோம். ஹெட்டிங்லி ஆடுகளம் எப்போதுமே கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல விக்கெட்டாக தான் அமைந்திருக்கின்றது.

இங்கு நாங்கள் பல மறக்க முடியாத ஒரு ஆட்டங்களை விளையாடிருக்கின்றோம். போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் நிலவும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். இந்தக் கோடை காலத்தில் இது எங்களுக்கு இரண்டாவது தொடராகும்.
இந்த போட்டிக்காக நாங்கள் ஏற்கனவே தயாராக இருக்கின்றோம். அது மட்டும் இல்லாமல் கவுன்டி கிரிக்கெட்டிலும் சில வீரர்கள் விளையாடி நல்ல பார்மில் உள்ளனர். எங்கள் அணியில் எந்த ஒரு மாற்றமும், முதல் ஏழு இடத்தில் இல்லை. பந்துவீச்சில் இளம் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கின்றோம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், நாங்களும் முதலில் பந்துவீச தான் இருந்தோம். முதல் செஷன் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதை நாங்கள் கடந்துவிட்டால் அதன் பிறகு பேட்டிங் செய்ய ஆடுகளம் எதுவாக மாறிவிடும். அது மட்டும் இல்லாமல் மேலும் தற்போது வெயில் அடிக்கின்றது.
எனவே இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் பயிற்சி செய்து வருகின்றோம். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நல்ல மன ஓட்டத்தில் இருக்கின்றார்கள். இன்றைய ஆட்டத்தில் சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இதே போல் கருண் நாயர் அணிக்கு திரும்பியுள்ளார். சாய் சுதர்சன் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக விளையாடுவார் என்று கில் தெரிவித்துள்ளார்.