ராஞ்சி : இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது சாதாரணமில்லை என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 17 டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. அதேபோல் பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் இருவரும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.

ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது, துருவ் ஜுரெல் மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், இது மிகச்சிறந்த டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. ஸ்கோர்போர்டை பார்க்கும் போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மட்டுமே தெரியும்.
ஸ்கோர்போர்ட் எப்போதும் ஆட்டத்தின் உண்மை நிலையை காட்டாது. இங்கிலாந்து அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். ஏனென்றால் அனுபவமற்ற இரு ஸ்பின்னர்களான பஷீர் மற்றும் ஹார்ட்லி இருவரும் அசாத்தியமான உழைப்பை கொடுத்துள்ளார்கள். இந்திய மண்ணில் கடினமான பிட்ச்களில் இளம் வீரர்களை சுதந்திரமான விளையாட வைப்பது எனது கேப்டன்சியின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன் நான்.
இரு அணிகளில் ஏராளமான இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கின்றனர். 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் எந்த முடிவும் வரலாம் என்ற நிலையில் ஆட்டம் இருந்தது. அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு எதிராக ரன் சேர்ப்பது, பேட்டிங் செய்வது, ஏன் ஸ்ட்ரைக் மாற்றுவதே கடினமான விஷயம். இந்த பிட்ச் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறாது என்பதும் புரிந்தது.
அது இன்று நிரூபணமாகியுள்ளது. மேலும், ஜோ ரூட் பேட்டிங்கிற்கு எதிராக வந்த விமர்சனங்கள் கொஞ்சம் அதீதமானதாக இருந்தது. 12 ஆயிரம் டெஸ்ட் ரன்களை விளாசுவது சாதாரணம கிடையாது. சோயப் பஷீரின் கதையே சுவாரஸ்யமானது. அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினமானது. எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்வதும், போட்டிகளில் வெற்றிபெறுவதும் தான் எங்களின் இலக்கு. கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த காலங்களில் என் மெசேஜ் ஒன்று தான். களத்தில் நாம் எதையும் இழக்க போவதில்லை. அதனால் கடைசி வரை வெற்றிக்கு போராட வேண்டும். சிறப்பாக போராடி இருக்கிறோம் என்பதால் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.