ராஜ்கோட்: இந்திய அணி எத்தனை ரன்கள் குவித்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால், இந்திய வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்பதே இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்குல்லமின் திட்டமாக இருப்பதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட் கூறி இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி மூன்று விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மா தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வந்தார். ஆனாலும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் "அட்டாக்" வியூகத்தை வகுத்தனர்.
அதன்படி விக்கெட் வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்தினர். இது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட், "நாங்கள் விக்கெட்களை எடுக்கத் தான் முயற்சி செய்து செய்தோம். நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது பற்றி மெக்குல்லம் கவலைப்படுவார் என நான் நினைக்கவில்லை. அவர் இந்த போட்டியில் விக்கெட்களை வீழ்த்துவதன் மூலம் எப்படி தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று மட்டுமே சிந்தித்தார்." என்றார்.
"நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக பந்து வீசி இருந்தோம். 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடி வந்த நிலையில் நாங்கள் விக்கெட்களை வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்தினோம். எங்களில் சிலர் அதிக ரன்களை விட்டு கொடுத்து இருந்தனர். ஆனால் விக்கெட்கள் தான் எங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே, இந்திய அணியை ஆல் அவுட் செய்ய முயற்சி செய்தோம்." என்றார் மார்க் உட்.