விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

விசாகப்பட்டினம் பிட்ச் வழக்கமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியில் பவுலிங்கை கூடுதல் பலப்படுத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசாத்திய பங்களிப்பை வழங்கி வந்த ஜடேஜாவின் இடத்தை எப்படி ரோகித் சர்மா நிரப்ப போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் ஜடேஜாவின் இடத்திற்கு குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் போட்டியில் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் ஆஃப் ஸ்பின்னர் என்பது பின்னடைவாக உள்ளது. ஏனென்றால் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இருக்கையில், வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி உள்ளது. ஆனால் அவரின் பேட்டிங் திறமை ஜடேஜாவுக்கு நிகரானது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த முறை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, வாஷிங்டன் சுந்தர் ஒரு இன்னிங்ஸில் 96 ரன்களை விளாசி இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இருப்பினும் குல்தீப் யாதவ் மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்பதால், அவரின் வெரைட்டி இந்திய அணி பவுலிங் படைக்கு கட்டாய தேவையாக அமைந்துள்ளது.
இதனால் சிராஜை நீக்கிவிட்டு குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா இருவருக்கும் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் 4 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கினால், 4 பேரையும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா எப்படி பயன்படுத்துவது என்பதே குழப்பத்தை ஏற்படுத்தும். கடந்த போட்டியில் 3 ஸ்பின்னர்களில் அக்சர் படேலையே அதிகளவு ஓவர்கள் வீசாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.