கொல்கத்தா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பயிற்சியாளர் கம்பீர் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூட்டணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றியைப் பெற்று அசத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கேப்டன் சூரியகுமார் யாதவ் வீரர்களை பாராட்டி பேசினார். அப்போது நாங்கள் டாஸ் வென்ற பிறகு களத்தில் வெளிப்படுத்திய சக்திதான் எங்களுடைய வெற்றிக்கு காரணம் என நினைக்கின்றேன்.

இதுதான் எங்களுடைய பெஞ்ச் மார்க். எங்களுடைய பவுலர்கள் நல்ல திட்டங்களை தீட்டி களத்தில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறார்கள். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்று ஆடிய விதம் கேக்கில் இருக்கும் செர்ரி போல் இருந்தது. இதே போல் ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் தென்னாப்பிரிக்காவிலும் வெளிப்படுத்தினோம்.
புதிய பந்தில் பந்து வீசவேண்டும் என்பதுதான் ஹர்திக் பாண்டியாவுக்கு நாங்கள் கொடுத்திருக்கும் பொறுப்பு. இதன் மூலம் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை வைத்து எங்களால் விளையாட முடியும். எப்படி பந்து வீச வேண்டும் என வருண் சக்கரவர்த்தியும் பயிற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஆர்ஸ்தீப் சிங்கும் தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் பொறுப்பை சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு விக்கெட்டுகளை ஆரம்பத்திலே பெற்று தந்தார். நாங்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக விளையாட நினைக்கிறோம். அதற்கான சுதந்திரத்தை எங்களுடைய பயிற்சியாளர் கம்பீர் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.
பில்டிங்கில் நாங்கள் இன்று அபாரமாக செயல்பட்டோம். அதற்கு காரணம் நாங்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டோம்.
கடினமான கேட்ச்களை வெற்றிக்கரமாக பிடிப்பது தான் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகப்படுத்துவது குறித்து யோசித்தோம். ஆனால் எங்களுடைய பலம் சுழற் பந்துவீச்சு தான் என்பதால் மூன்று ஸ்பின்னர் வைத்து இன்று களம் இறங்கினோம். அவர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று சூரிய குமார் கூறியுள்ளார்.