மும்பை: ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதனால் பிசிசிஐ நிர்வாகிகள், அந்த டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் டெஸ்ட் தொடரை வெல்வது தொடர்பாக பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதில்லை. இம்முறை அந்த வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவதாக புஜாரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா, திடீரென கழற்றிவிடப்பட்டது பற்றியும் புலம்பி இருக்கிறார்.

அதில், சர்வதேச கிரிக்கெட்டில் உச்சத்தில் இந்திய அணிக்காக 100 போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய ஒருவர், தற்போது அந்த அணியின் அங்கமாக இல்லை. அதற்காக எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் எனது உழைப்பையும், முயற்சியையும் கைவிடப் போவதில்லை. இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காதது நிச்சயம் ஏமாற்றம் தான்.
ஆனால் கிரிக்கெட் மீது கொண்ட காதல் காரணமாக நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். கிரிக்கெட் உடன் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்க விரும்புகிறேன். பெரிதாக எந்த வாய்ப்பையும் எதிர்பார்க்காமல், ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். உள்ளூர் கிரிக்கெட், கவுண்டி கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது. ஒருவேளை இந்திய அணிக்கு எனது தேவை இருந்தால், வாய்ப்பு கிடைத்தால், தயாராகவே இருக்கிறேன். அதற்காக ஃபிட்னஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இந்திய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மிகப்பெரிய போட்டி உள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இம்முறை வாய்ப்பு கிடைத்தால், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகவே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். புஜாராவுக்கு நம்பர் 3 வரிசையில் ஆடி வரும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.