ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபு போட்டியில் நட்சத்திர வீரர் புஜாரா சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்டோர் காயம் மற்றும் சொந்த காரணங்களால் விலகியுள்ளனர். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சொந்த மண்ணில் ஆடி வரும் இந்திய அணி முழுக்க முழுக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மட்டுமே நம்பி விளையாடி வருகிறது.

இதனால் விராட் கோலி அணிக்கு திரும்பும் வரை சீனியர் வீரரான புஜாராவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் புஜாரா உச்சக்கட்ட ஃபார்மில் ஆடி வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் செளராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்த போட்டியில் செளராஷ்டிரா அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், புஜாரா களம் புகுந்தார். சிறப்பாக ஆடிய புஜாரா ராஜஸ்தான் அணியின் வலிமையான பவுலிங் படையை எதிர்த்து சதம் விளாசி அசத்தினார். 230 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 9 பவுண்டரிகள் உட்பட 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் நடப்பு ரஞ்சி சீசனில் மட்டும் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் உட்பட 538 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். ஏற்கனவே முதல்தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் புஜாரா. தற்போது இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக ரஞ்சி கிரிக்கெட்டில் 62வது சதத்தை விளாசியுள்ளார்.
மீண்டும் உச்சக்கட்ட ஃபார்மிற்கு திரும்பியுள்ள புஜாராவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் 33 விக்கெட்டுகளை இங்கிலாந்து ஸ்பின்னர்கள் வீழ்த்தியுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கேஎஸ் பரத் உள்ளிட்டோர் ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாட தடுமாறி வருகின்றனர். இதனால் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.