லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஒரு கை உடைந்த நிலையில் மற்றொரு கையுடன் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். கிறிஸ் வொக்சின் இந்த தைரியத்தை பாராட்டி பலரும் அவரை வாழ்த்தினர்.
வெற்றி பெற்ற பிறகும் வீரர்கள் தங்களது கொண்டாட்டத்திற்கு நடுவில் கிறிஸ் வொக்சை கட்டி அணைத்து வாழ்த்தினார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 35 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகளும் தேவைப்பட்டது.

இதனால் கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்ய தேவையில்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது.
ஒற்றை கையுடன் எப்படி விளையாடி இருப்பேன்:
அப்போது கிறிஸ் வொக்ஸ் தனது ஒரு கையுடன் பேட்டிங் செய்ய வந்தார். எனினும் எதிர் திசையில் நின்ற அட்கின்சன் அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டு கிறிஸ் வொக்ஸை பேட்டிங் செய்ய முடியாத படி பார்த்துக் கொண்டார். எனினும் இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிறிஸ் வொக்ஸ், "நாங்கள் இவ்வளவு செய்தும் எங்களுக்கு சோகமான முடிவு அமைந்தது. ஒற்றைக் கையுடன் நான் பேட்டிங் செய்திருந்தால் என்னவாகி இருக்கும். நான் பந்தை எப்படி தடுத்து இருப்பேன். இல்லை ஒற்றை கையுடன் நான் பௌண்டரி அடித்திருப்பேனா என்றெல்லாம் என்னுடைய ஒரு பகுதி யோசிக்க தோன்றுகிறது."
கடவுள் தான் என்னை காப்பாற்றினார்:
"ஆனால் மறுபுறம் கடவுளுக்கு நன்றி. ஒரு பந்தை கூட நான் எதிர்கொள்ளாமல் போனதற்கு என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பௌன்சர்களை ஒற்றை கையால் தடுப்பது என்பது சிரமமான காரியம். அது மேலும் காயத்தை ஏற்படுத்திருக்கலாம். நான் பந்துகளை எதிர்கொண்டு இருந்தால் நிச்சயம் அது பவுன்சராக தான் இருக்கும் என்று எனக்கு தெரியும்."
"எனவே நான் பதற்றமாக தான் களத்தில் நின்று கொண்டு இருந்தேன். அது பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் முதல் இன்னிங்ஸின் போது நான் கிரிக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்த போது நான் பேட்டிங் செய்யவா என்று பயிற்சியாளர் மெக்குல்லமிடம் கேட்டேன். அதற்கு வாய்ப்பே வராது, பின் சூழல் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்" என்று கிறிஸ் வொக்ஸ் தெரிவித்தார்.