இங்கிலாந்து அதிரடி
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய் - பேரிஸ்டோ அபாரமாக ஆடினர். அவர்களை பிரிக்க முடியாமல் கேப்டன் கோலி தடுமாறினார்.
ராய் - பேரிஸ்டோ அபாரம்
ஜேசன் ராய் கொடுத்த கேட்ச்சை தோனி கணிக்கத் தவறி ரிவ்யூ கேட்காமல் சொதப்பினார். அம்பயரும் தவறான தீர்ப்பு கொடுத்து இருந்தார். இந்திய அணியின் சொதப்பலால் தப்பிய ராய் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பேரிஸ்டோ சதம் அடித்து, 111 ரன்கள் எடுத்த பின்னரே ஆட்டமிழந்தார்.
கை கொடுத்த ஸ்டோக்ஸ்
இடையே ஜோ ரூட் 44, இயான் மார்கன் 1, பட்லர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 54 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 337 ரன்கள் எடுத்தது.
ஷமி, பும்ரா பந்துவீச்சு
இந்திய அணியின் பும்ரா கட்டுக் கோப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்தார். ஷமி 69 ரன்கள் கொடுத்தாலும் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். சாஹல் 88, குல்தீப் 72, பண்டியா 60 ரன்கள் கொடுத்தனர்.
ராகுல் டக் அவுட்
338 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி சேஸிங் செய்யத் துவங்கிய இந்திய அணிக்கு ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ரோஹித் சர்மா - விராட் கோலி இணைந்து பொறுப்பாக ரன் சேர்த்தனர். இவர்கள் செய்த முக்கிய தவறு, மிகவும் பொறுமையாக ரன் சேர்த்தனர்.
ரோஹித் - கோலி போராட்டம்
ரோஹித் - கோலி இருவரும் ஓவருக்கு 4 ரன்கள் என்ற நிலையை எட்டவே அதிக ஓவர்கள் எடுத்துக் கொண்டனர். இவர்கள் பேட்டிங் செய்த போது ரன் ரேட் 6-ஐ தாண்டவே இல்லை. எனினும், இருவரும் சிறப்பாக ரன் சேர்த்தனர். கோலி 66, ரோஹித் சர்மா 102 ரன்கள் எடுத்தனர். ரோஹித் சர்மா தன் 25வது ஒருநாள் போட்டி சதம் கடந்து அசத்தினார்.
பண்ட் சுமார் ஆட்டம்
அடுத்து வந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். விஜய் ஷங்கருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பண்ட் ஓரளவு தான் ஆடினார். எனினும், அவரையும் குறை கூற முடியாது. அவருக்கு அனுபவம் குறைவு.
பண்டியாவுக்கு திட்டம்
அதிரடி மன்னன் பண்டியா தன்னால் முடிந்த வரை போராடினார். 33 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இவரை கண்டு மட்டுமே இங்கிலாந்து அணி அஞ்சியது. சிறிது நேரம் போட்டியை நிறுத்தி விட்டு தீவிரமாக விவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அடுத்த ஓவரில் பண்டியா ஆட்டமிழந்தார்.
தோனி, ஜாதவ் அதிர்ச்சி
பண்டியா ஆட்டமிழந்த பின் தோனி - ஜாதவ் ஜோடி சேர்ந்தனர். அப்போது கடைசி 4 ஓவர்களில் 62 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலை. ஓவருக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும். இது தோனி - ஜாதவ்வால் எடுக்கக் கூடியது தான். ஆனால், அவர்கள் இருவரும் கண்ணும் கருத்துமாக சிங்கிள் ரன் எடுக்க ஆரம்பித்தனர். இந்திய ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்கே போனார்கள். இந்தியா கடைசி 4 ஓவர்களில் தோல்வியை நோக்கி ஆடியது.
தோல்வி ஆரம்பம்
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வி அடையாமல் வலம் வந்த இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது. இது தான் ஆரம்பம்!!