விஜய் ஷங்கர் நீக்கத்துக்கு இது தான் காரணமா? கோலி சொல்வதை நம்ப முடியலையே!
பிர்மிங்காம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன முக்கியமான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றே தீர வேண்டும் என்ற நிலை.
இந்திய அணி தோல்வி அடையாத அணி என்ற பெயரோடு, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறி விடும். புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு ஏற்படும்.

விஜய் ஷங்கர் நீக்கம்
இந்த நிலையில் தான், கடந்த மூன்று போட்டிகளில் சரியாக பேட்டிங் செய்யாத விஜய் ஷங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே, பலரும் கூறிய நிலையில், விஜய் ஷங்கர் இந்தப் போட்டியில் அணியின் இருந்து நீக்கப்பட்டார்.

ரிஷப் பண்ட் சேர்ப்பு
அவருக்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இளம் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இவரை அணியில் சேர்க்கவே, விஜய் ஷங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்றே பலரும் எண்ணிய நிலையில், கோலி டாஸ் போடும் போது, வேறு ஒரு காரணத்தை கூறினார்.

காரணம் என்ன?
கோலி கூறுகையில், விஜய் ஷங்கருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், சிரமத்தில் இருக்கிறார் என்று குறிப்பிட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது என பலரும் கேட்டனர்.

விஜய் ஷங்கருக்கு காயமா?
விஜய் ஷங்கர் வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு முன்பு, பும்ரா வீசிய யார்க்கர் பந்தில் லேசாக காயமடைந்தார். அப்போது அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை என்று கூறியது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் அவர் ஆடினார். இந்த நிலையில், அதை இப்போது காரணமாக கூறி, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்துள்ளார்கள்.

இனி வாய்ப்பு கிடைக்குமா?
இனி விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. காயம் (இருந்தால்..) குணமானாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமே. ரிஷப் பண்ட் தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications