சீருடை மாற்றம்
உலகக்கோப்பை தொடரில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி ஆடும் போட்டிகளில் எதிரணி இங்கிலாந்து அணியின் நீல நிற உடை அணியக் கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தங்கள் நீல நிற உடையை தவிர்த்து புதிய உடையில் ஆடியது.
காவி உடை சர்ச்சை
புதிய உடை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியது. மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் கொடியின் வண்ணமான காவி நிறத்தை இந்திய கிரிக்கெட் அணிக்குள் திணிப்பதாக எதிர்கட்சிகள் புகார் கூறின.
இந்தியா மோசமான ஆட்டம்
அது ஒரு பக்கம் இருக்க, இந்திய வீரர்கள் புதிய உடையுடன் முதன் முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் பேரிஸ்டோ, ராய் இந்திய பந்துவீச்சை சிதறடித்து ரன் மழை பொழிந்தனர்.
காவி தான் காரணம்
இதைக் கண்ட இந்திய ரசிகர்கள், புதிய காவி உடை வந்த நேரமே சரியில்லை என புலம்பத் துவங்கினர். ஏற்கனவே, இந்த காவி உடை பெட்ரோல் பங்க் சீருடை போலவும், பிரபல ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் சீருடை போல இருப்பதாகவும் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில், அதையெல்லாம் மீண்டும் கூறி நீல நிற சீருடைக்கு இந்திய அணி மாற வேண்டும் என கூறி வருகின்றனர்.