பலத்த போட்டி
உலகக்கோப்பை தொடரில் நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. தற்போது உள்ள சூழ்நிலையில், இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும்.
இங்கிலாந்து தோற்றால்..
அதன் பின், பாகிஸ்தான் வங்கதேச அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் அரையிறுதிக்கு செல்ல உள்ளது எந்த அணி என்பது முடிவு செய்யப்படும். இதனால், வலுவான அணியாக வலம் வந்த இங்கிலாந்து அணி, தற்போது மோசமாக ஆடி வரும் நிலையில், இந்திய அணியிடம் தோற்கும் என்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவுக்கு ஆதரவு
இதனால், தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் பரம எதிரி அணியான இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என இந்திய அணிக்கு ஆதரவாக வேண்டிக் கொண்டு வருகிறார்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் ரசிகர்கள்.
வெறுக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய அணியை சுத்தமாக பிடிக்காது. இரு நாடுகளுக்கும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக பகை நீடித்து வருகிறது என்றாலும், வேறு வழியில்லாமல், இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தோல்வி அடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் சில பாகிஸ்தான் ரசிகர்கள்.
கடுப்பில் வங்கதேசம்
மறுபுறம் வங்கதேச ரசிகர்களுக்கு, இந்திய அணி மீதான கோபம் வித்தியாசமானது. 2018 ஆசிய கோப்பை தொடர், 2015 உலகக்கோப்பை தொடர் போன்றவற்றில் வங்கதேச அணிக்கு தவறான அம்பயர் தீர்ப்புகள் கொடுக்கப்பட்டன. அது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் மாறியது. அதன் காரணமாகவே, அவர்கள் இந்திய அணி மீது வெறுப்பை கக்கி வருகிறார்கள். எனினும், அவர்களும் பாகிஸ்தான் போல, வேண்டா வெறுப்பாக இந்திய அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.