மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அணியில் கம்பீர் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கும் தோனிக்கும் ஏழாம் பொருத்தமாக அமைந்தது.
இதனால் கம்பீர் ஓய்வு பெற்ற பிறகு பலமுறை தோனியை விமர்சித்து இருக்கின்றார். ஆனால் தற்போது தோனியை அவர் பாராட்டி பேசி வந்தாலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து சிஎஸ்கே அணி வீரர்களை புறக்கணித்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ருதுராஜ், கலீல் அகமது, அன்சூல் காம்போஜ், சிவம் துபே போன்று வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜடேஜாவை தவிர வேறு எந்த ஒரு சிஎஸ்கே வீரர்களும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இங்கிலாந்து தொடரில் கூட சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய வீரர்களை சேர்க்காமல் ஜடேஜாவுக்கு மட்டும்தான் கம்பீர் வாய்ப்பு வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது என்பதால் கூடுதலான ரிசர்வ் வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்திருக்கிறது. அந்த ரிசர்வ் வீரர்கள் கூட சிஎஸ்கே அணியினர் இல்லை என்பதுதான் தற்போது குறையாக இருக்கின்றது.
அண்மையில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், சிஎஸ்கே வீரர் கலீல் அகமது அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அவருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே போன்று பயிற்சி ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் அன்சூல் கம்போஜ் மற்றும் இந்திய அணியில் இடம் பிடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் போன்ற வீரர்களுக்கும் அணியில் இடம் தரப்படுவதில்லை என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.