கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி கயானாவில் நடைபெறுகிறது. எனினும் டாஸ் மழை காரணமாக தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மழை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதால் இந்த போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டால் அது இந்தியாவுக்கு தான் சாதகம்.

ஆனால் தொடர்ந்து மழை பெய்யாமல் விட்டுவிட்டு பெய்து போட்டி ஐந்து ஓவர்களாகவோ இல்லை பத்து ஓவர்களாக நடத்தப்பட்டால் நிச்சயம் அது இங்கிலாந்துக்கு தான் சாதகம். அதுமட்டுமல்லாமல் மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பது நிச்சயம் இந்தியாவுக்கு பாதகமான விஷயமாக கருதப்படுகிறது.இந்திய அணியின் பலமாக சுழற் பந்து வீச்சு கருதப்படுகிறது.
இதனால் ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா களமிறங்கி வருகிறது. சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்களும் தடுமாறுவார்கள். இந்த நிலையில் கயானா ஆடுகளம் சுழற் பந்துவீச்சு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியாவுக்கு தான் அது முதலில் சாதகமாக இருந்தது.
ஆனால் தற்போது மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் சுழற் பந்து வீச்சு பெருமளவில் எடுபடாது. பந்து ஈரமாக இருக்கும் போது சுழற் பந்துவீச்சாளர்களால் அதனை சரியாகப் பிடித்து பந்தை நினைத்தது போல் வீச முடியாது. இதன் காரணமாக இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சார்களை வைத்து விளையாடுவது ஆபத்தை கொடுக்கும்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ்க்கு பதில் முகமது சிராஜ் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதே சமயம் இங்கிலாந்து அணியும் பெரிய அளவில் சுழற் பந்துவீச்சை பயன்படுத்த முடியாது. காற்றில் ஈரப்பதம் இருப்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும்.
இந்த ஸ்விங்கை பயன்படுத்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம். இதனால் இங்கிலாந்தை விட இந்தியாவுக்கு தான் தற்போது பாதகமாக இருக்கிறது.இதனால் மழை தொடர்ந்து பெய்து போட்டி ரத்தாக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.