லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக சதம் விளாசி இருக்கிறார்கள். இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து களத்தில் உள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின்,முகமது சமி ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி இருக்கிறது. கில் தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.

லீட்ஸ் மைதானத்தின் முதல் நாள் முதல் செஷனில் எப்போதுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்துவீசி அணியே வெற்றி பெற்றது. இதன் காரணமாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி தடுமாறுவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கும். ஏனென்றால் இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தது. இருவரும் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விரட்டினர்.
பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 42 ரன்கள் எடுத்திருந்தபோது கவனக்குறைவு காரணமாக ஆட்டம் இழந்தார். அறிமுக போட்டியில் விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தார். இந்த தருணத்தில் ஜெய்ஸ்வால், கில் ஜோடி பார்ட்னர்ஷிப் சேர்ந்து அபாரமாக ரன்களை குவித்தனர்.
இதனால் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் லீட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அது மட்டும் இல்லாமல் 23 வயதுக்குள் அதிக சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், மறுமுனையில் கில் அதிரடி காட்டினார். 140 பந்துகளில் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டும் இல்லாமல் கேப்டனாக களமிறங்கிய முதல் இன்னிங்ஸ் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் கில்லுக்கு இது ஆசியாவுக்கு வெளியே அடிக்கப்பட்ட முதல் சதமாகும். மறுமுனையில் ரிஷப் பண்ட் தன்னுடைய ஆக்ரோஷமான அதிரடியை வெளிப்படுத்தினார். எனினும் கொஞ்சம் பொறுமையையும் அவர் களத்தில் காட்டினார். இதனால் முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழ்ப்பிற்கு 351 ரன்கள் எடுத்திருக்கிறது. கில் 127 ரன்களுடனும், பண்ட் 57 ரன்களடனும் களத்தில் உள்ளனர்.