ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. துருவ் ஜுரெல் - குல்தீப் யாதவ் இருவரும் நிதானமாக விளையாடி 2வது நாளை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தரமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.

219 ரன்களுடன் துருவ் ஜுரெல் - குல்தீப் யாதவ் கூட்டணி ஆட்டத்தை தொடங்கியது. இவர்கள் இருவரும் 8வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆட்டத்தையும் மொத்த பொறுப்பையும் இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் எடுத்துக் கொண்டார். 96 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அதன்பின் அதிரடிக்கு திரும்பினார்.
ஆகாஷ் தீப்பை ஒருமுனையில் வைத்து சிக்ஸ், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் விறுவிறுவென முன்னேற்றமடைந்தது. இதனிடையே ஆகாஷ் தீப்பும் ஒரு சிக்ஸை அடிக்க, இங்கிலாந்து வீரர்கள் மிரண்டு போயினர். ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலாந்து அணியின் கையில் இருந்து நழுவியது.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழக்க, துருவ் ஜுரெல் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி இந்திய அணியின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். அப்போது துருவ் ஜுரெல்லின் ஸ்கோர் 90 ரன்களாக இருந்தது. இதனால் அவர் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
ஆனால் டாம் ஹார்ட்லி பந்தில் 90 ரன்களில் போல்டாகி வெளியேறினார். டெய்லெண்டர்களுடன் மட்டுமே பேட்டிங் செய்து இந்திய அணியை மொத்தமாக தூக்கி நிறுத்தியுள்ளார். இவர் ஆட்டமிழந்த பின் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் நேரடியாக வந்து அவரை பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் ஓய்வறை வாசலுக்கு வந்து அவருக்காக கைகளை தட்டி வரவேற்றனர்.
இதன் மூலம் இறுதியாக இந்திய அணி 103.2 ஓவர்களில் 307 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ராஞ்சி பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணியால் வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது.