லீட்ஸ்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், துணை கேப்டன் ரிஷப் பண்ட் மீது அதிருப்தியில் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தனைக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பண்ட் சதம் அடித்து இந்திய அணியில் மிகச் சிறப்பாக ஆடியிருந்தார்.
ஆனால், அவரைப் பாராட்ட மறுத்துவிட்டார் கௌதம் கம்பீர். மேலும், ரிஷப் பண்ட் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிய கேள்விக்குக் கோபமாக பதிலளித்தார். இதை சுட்டிக்காட்டி இருக்கும் ரசிகர்கள், "ரிஷப் பண்ட் மீது கௌதம் கம்பீருக்கு கோபம் இருக்கிறதா? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?" எனக் கேட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நான்கு வீரர்கள் மொத்தம் ஐந்து சதங்களை அடித்திருந்தனர். ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்திருந்தார். இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக செயல்பட்ட போதிலும், முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்து, பந்துவீச்சில் அதை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கௌதம் கம்பீர், ரிஷப் பண்ட் குறித்த கேள்வியின் போதுதான் தனது கோபத்தைக் காட்டியிருந்தார். "ரிஷப் பண்ட் இரண்டு சதங்களை அடித்திருக்கிறார். இது தோல்வியிலும் இந்திய அணிக்கு சாதகமான விஷயமா?" எனக் கேட்கப்பட்டபோது, "மேலும் மூன்று சதங்களும் அடிக்கப்பட்டன. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம் தான். மிக்க நன்றி," என்று கோபமாகக் கூறினார் கௌதம் கம்பீர்.
இதன் மூலம், "ரிஷப் பண்ட் அடித்த சதத்தை மட்டும் நான் பார்க்க மாட்டேன். மற்ற வீரர்கள் அடித்த சதத்தையும் சேர்த்துதான் பார்ப்பேன். அணிதான் முக்கியம்; ஒரு தனி வீரர் முக்கியமல்ல," என்பதை கௌதம் கம்பீர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ரிஷப் பண்ட் அதிக ரன்கள் சேர்க்கவில்லை என்பதால், அவர் மீது கௌதம் கம்பீர் அதிருப்தியில் இருந்ததாகப் பொதுவாக கூறப்பட்டது. அதனால்தான் இப்போதும் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பி உள்ளது.