கயானா: 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து ஓய்வறையில் சோகமாக அமர்ந்திருந்தோம். ஆனால் இன்று அதே அணிக்கு எதிராக அதேபோன்ற சூழலில் வென்று பதிலடி கொடுத்துள்ளோம் என்று இந்திய அணியின் ஓய்வறையில் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நாளை இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் சிறந்த ஃபீலருக்கான விருது யாருக்கு என்ற ஓய்வறை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் இருந்தனர். இதன்பின் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை அளிப்பதற்காக சிறந்த அழைப்பாளராக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வறைக்கு வந்தார்.
இதனால் உற்சாகமடைந்த இந்திய அணி வீரர்கள், கைகளை தட்டி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இதன்பின் தினேஷ் கார்த்திக் பேசுகையில், இந்த விருதினை அளிக்க வந்த வீரர்களின் பட்டியலில் இருக்கும் பெயர்களே ஆச்சரியமாக உள்ளது. சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோராலும் ஸ்பைடர் கேம் உள்ளிட்டவையாலும் விருது அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏலியனை மட்டும் தான் டி.திலீப் அழைக்கவில்லை.
2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி இதே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த போது, அடிலெய்ட் மைதான ஓய்வறையில் நாம் எப்படி இருந்தோம் என்று உடனிருந்து அனுபவித்திருக்கிறேன். ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே போன்ற அரையிறுதியில் அதே அணியை வீழ்த்தி ஓய்வறையில் உற்சாகமாக இருக்கிறோம்.
டி20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்ததில் இருந்து ஒவ்வொரு முடிவும் சிறப்பாக உள்ளது. நிச்சயம் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவதை பாராட்ட வேண்டும். அதேபோல் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடைசி போட்டியில் ஆடப் போகிறார். அதற்கும் வாழ்த்துகள். விளையாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஏராளமான கதைகள் இருக்கும்.
ஆனால் இப்போது பதக்கத்தை கொடுக்கப் போகும் வீரரின் கதை தான் மிகச்சிறந்த ஒன்று. ஏனென்றால் கடந்த ஓராண்டில் அந்த வீரர் மிகப்பெரிய பயணத்தை செய்திருக்கிறார். 6 மாதத்திற்கு முன்பு வரை அவர் விளையாடுவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடி கோடிக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார். ரிஷப் பண்ட் தான் அது என்று தெரிவித்துள்ளார்.