ஐதராபாத் : ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தனக்கு உதவியதை போல் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய இளம் வீரரான சுப்மன் கில்லுக்கும் உதவ வேண்டும் என்று முன்னாள் வீரர் பீட்டர்சன் அட்வைஸ் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுமையான இடத்தில் உள்ளது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதன் மூலமாக இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.

இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில்லை தவிர்த்து மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினர் என்று சொல்ல முடியும். ஏனென்றால் அனைவரும் செட்டிலான பின், சிக்சர் அடிக்க முயன்று தான் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் சுப்மன் கில் ஃபிளிக் ஷாட் ஆட முயன்று, அந்த ஷாட் ஆன் ட்ரைவாக மாறி கேட்ச்சானது. இதனால் 23 ரன்களில் பரிதாபமான ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வரும் சுப்மன் கில், இதுவரை ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. கடந்த 10 இன்னிங்ஸ்களாக சுப்மன் கில் சொதப்பி வரும் சூழலில், இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. அவரிடம் நிலைத்து நின்று பேட்டிங் செய்யும் திறனோ, விக்கெட்டை காப்பாற்றும் திறனோ இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேபோல் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சுப்மன் கில் திணறி வருவதாகவும் முன்னாள் வீரர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் நேரலையிலேயே இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்து எனது ஆட்டம் மாறுவதற்கு காரணமாக இருந்தவர் ராகுல் டிராவிட்.
அவர் இந்த நேரலையை பார்ப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் சுப்மன் கில்லுடன் நேரம் செலவிட வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் பேசிய வார்த்தைகள் தான் இப்போது சுப்மன் கில்லிடம் ராகுல் டிராவிட் பேச வேண்டிய தேவை உள்ளது. அதிகமாக ஆஃப் சைட் திசையில் விளையாட அறிவுறுத்த வேண்டும், பந்தை எந்த லெந்தில் அடிக்க வேண்டும், ஸ்ட்ரைக் ரொட்டேஷன் உள்ளிட்டவற்றை சுப்மன் கில் கற்க வேண்டிய நிலை உள்ளது. அவர் சிறந்த வீரராக உருவாகுவதற்கு ராகுல் டிராவிட் தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.