கயானா : இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை யாரும் கேள்வி எழுப்புவது குறித்து சிந்திக்கவே தேவையில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஜடேஜா களத்தில் ஃபீல்டிங்கில் மட்டும் இதுவரை 20 முதல் 30 ரன்களை எளிதாக தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்கும் போது பேட்டிங், பவுலிங்கில் அசத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி நாளை நடக்கவுள்ளது. இதன் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. ஏற்கனவே 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

இதனால் இம்முறை இங்கிலாந்து அணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜாவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாம் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
ஏனென்றால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக ஜடேஜா 10 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும், 3 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 16 ரன்களையும் மட்டுமே சேர்த்திருக்கிறார். இவரை ஒப்பிடும் போது அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கி இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட யுவராஜ் சிங்கிற்கு சமமான பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜடேஜாவின் இடம் குறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங், பவுலிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் ஜடேஜாவிடம் சிறந்த அனுபவம் இருக்கிறது. அவருக்கு கிடைத்துள்ள சின்ன சின்ன வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங்கில் மட்டும் 20 முதல் 30 ரன்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
அவரின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் மற்றும் ரன் அவுட்களை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. அவரின் ஃபீல்டிங்கால் 30 ரன்களை தடுத்துள்ள நிலையில், அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் பங்களிப்புகள் இந்திய அணி கூடுதல் சாதகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஜடேஜாவின் இடத்தை கேள்வி எழுப்புவது யாரும் சிந்திக்க கூட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.