பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 587 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 407 ரன்கள் மட்டும் தான் எடுத்திருக்கிறது.
இந்த சூழலில் 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது. நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது.இந்த சூழலில் இந்திய அணி இங்கிலாந்துக்கு கிட்டத்தட்ட 500 ரன்கள் இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற அல்லது டிரா செய்ய வாய்ப்பு இருக்கும்.

இல்லை என்றால் இங்கிலாந்து அணி அந்த இலக்கை எட்டி விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி கிட்டத்தட்ட 300 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பிர்மிங்காம் ஆடுகளம் கடந்த மூன்று நாட்களாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. நான்காவது நாள் ஆட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மாலை நேரத்தில் 80 சதவீதத்திற்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை நிலவரம் கணிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இன்றைய நாள் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இங்கிலாந்து வீரர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு பந்தை நன்றாக ஸ்விங் செய்தால் அது இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால் அது இங்கிலாந்துக்கு லட்டு சாப்பிடுவது போல் மாறிவிடும். இதனால் எங்களுக்கே வருவீங்களா என்று ரசிகர்கள் மழையை கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கின்றது.