தரம்சாலா : இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தரம்சாலா பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டி அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் முதல் செஷனில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 100 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் இரண்டாவது செஷனில் வழக்கம் போல் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாகி கிராலி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டை போல் சரிந்தனர்.
அதிரடியாக ரன்கள் குவித்த பேர்ஸ்டோவ் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா பவுலிங்கில் ஜோ ரூட் 26 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குல்தீப் யாதவ் சுழலில் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 175 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டாம் ஹார்ட்லி மற்றும் மார்க் வுட் இருவரும் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் வெளியேறினர்.
இதனால் இங்கிலாந்து அணி 2வது செஷனில் 94 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்தது. 194 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலையில், 3வது செஷன் தொடங்கியது. இதில் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் அதிரடியாக ரன்களை குவித்தார். அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே 12 ரன்கள் சேர்க்கப்பட, பும்ரா ஓவரிலும் 12 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 200 ரன்களை எளிதாக கடந்தது.
பின்னர் அஸ்வின் வீசிய ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 24 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேற, அதே ஓவரில் ஆண்டர்சன் டக் அவுட்டாகினர். இதனால் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.