பிர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கின்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கில் 269 ரன்களில் ஆட்டமிழக்க முதல் இன்னிங்சில் 587 ரன்கள் இந்திய அணி எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க விரட் பென் டக்கட், ஆலி போப் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். மற்றொரு தொடக்க வீரரான ஜாக் கிராலி 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்த சூழலில் 77 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆகியும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துதடுமாறியது.
இந்த கட்டத்தில் தான் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜெமி ஸ்மித் ஆகியோர் ஜோடி சேர்ந்து அபாரமாக ரன்களை சேர்ந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். இதில் ஜெமி ஸ்மித் அதிரடியாக விளையாடி பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரு ஓவரில் மட்டும் 23 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஜெமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் அடித்தார். மறுமுனையில் ஹாரி புரூக் தன்னுடைய ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் அடுத்தடுத்து 150 ரன்கள் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 303 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் ஹாரி புரூக் 158 ரன்கள் எடுத்திருந்தபோது ஆகாஷ் தீப் அவரை கிளீன் போல்ட் ஆக்கினார்.
அதன் பிறகு கிறிஸ் வொக்ஸ் ஐந்து ரன்களில் வெளியேற,பிரைடன் கர்ஸ் ஜோஸ் டாங்க் மற்றும் சோயிப் பஷீர் ஆகியோர் விக்கெட்டை சிராஜ் டக் அவுட் ஆக்கினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.
இந்திய அணி பந்துவீச்சில் சிராஜ் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 88 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கின்றனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 180 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்கள் மேல் அடித்து இங்கிலாந்துக்கு 500 ரன்கள் வெற்றி இலக்கை கொடுக்க வேண்டும் அப்போதுதான் இங்கிலாந்து அணி அந்த இலக்கை எட்ட முடியாது.