மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கி இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபடியும் அபிசேக் சர்மா பட்டையை கிளப்பினார். இதன் மூலம் 37 பந்துகளில் அபிஷேக் ஷர்மா சதத்தை பூர்த்தி செய்தார். சிவம் துபே, தன் பங்குக்கு 13 பந்துகளின் 30 ரன்கள் எடுத்தார் . அக்சர் பட்டேல் 15 ரன்களில் வெளியேற, கடைசி வரை அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 54 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பென் டக்கட் டக்அவுட் ஆக கேப்டன் ஜாஸ் பட்லர் 7 ரன்களிலும் ஹாரி புருக் 2 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் ஒன்பது ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பில் சால்ட் மட்டும் அதிரடியாக விளையாடி ஏழு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் எடுத்தார். இதில் 23 பந்துகளில் அவர் 53 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் இங்கிலாந்து அணி வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் வந்த வேகத்தில் திரும்பினார்கள்.
அதிரடியாக ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பெரிய ஷார்ட் ஆட முற்பட்டு இந்திய வீரர்களிடம் கேட்ச் கொடுத்து பிடிபட்டனர். இதனால் 10.3 ஓவர்கள் எல்லாம் இங்கிலாந்து அணி 97 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் முகமது சமி மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.