மான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நாளை புதன்கிழமை தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் வழக்கம்போல் 36 மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 10 வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். ஒரு வீரர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறார். அது யார் என்று தற்போது பார்க்கலாம். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் சோயிப் பஷிர் காயமடைந்தார். எனினும் காயத்தை பொருட்படுத்தாமல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் ஈடுபட்டார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற பிறகு இந்த தொடரில் இருந்து சோயிப் பஷிர் விலகினார். தற்பொழுது அவருக்கு பதிலாக லியான் தாசன் சேர்க்கப்பட்டிருக்கிறார். கருண் நாயர் போல் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி 8 ஆண்டுகள் ஆகிறது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஓரளவுக்கு நன்றாக விளையாடக்கூடிய வீரர் அவர் மட்டும் தான்.அது மட்டும் இல்லாமல் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் கொஞ்சம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாசன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் காயம் அடைந்த நிலையில் அவர் முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: 1,ஜாக் கிராலி, 2, பென் டக்கட், 3,ஆலி போப், 4, ஜோ ரூட், 5,ஹாரி புரூக், 6,பென் ஸ்டோக்ஸ், 7,ஜெமி ஸ்மித், 8, லியாம் டாசன், 9, கிறிஸ் வொக்ஸ், 10.பிரைடன் கர்ஸ், 11, ஜோப்ரா ஆர்ச்சர்
