பிர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனை இங்கிலாந்து அணி தவிர்த்து இருக்கின்றது. இதன் மூலம் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்யும் கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. இந்த சூழலில் பிர்மிங்காமல் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது.

இந்த சூழலில் தங்களுடைய முதல் இன்னிங்சில் இங்கிலாந்து விளையாடியது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பென் டக்கட், ஆலி போப் டக் அவுட் ஆனார்கள். ஷாக் கிராலி 19 ரன்களும், ஜோ ரூட் 22 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாலோ ஆனை தவிர்க்க 388 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இங்கிலாந்து அணி அதனை எட்டாது என்று இந்திய ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹாரி புரூக் மற்றும் ஜெமி ஸ்மித் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.
குறிப்பாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் விளாசினார். மறுமுனையில் ஹாரி புரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கில் தடுமாறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இருவரும் தலா 150 ரன்கள் கடந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஃபாலோ ஆணை தவிர்த்தது.
ஹாரி புரூக் 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஒரு வழியாக ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டிற்கு 303 ரன்கள் சேர்த்து இருந்தது. தற்போது இங்கிலாந்து பாலோ ஆனை தவிர்த்து இருப்பதால் இந்திய அணி மீண்டும் இரண்டாவது பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கும் போது குறைந்தபட்சம் 100 ரன்களாவது கூடுதலாக முன்னிலை பெற்று இருக்க வேண்டும்.
இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இல்லை என்றால் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில், இந்தியா நிர்ணயிக்கும் இலக்கை விரைவாக எட்டி விடுவார்கள்.