லண்டன்:இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் 44, 33 ரன்களும் பந்துவீச்சில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதுமட்டுமில்லாமல் ரிஷப் பந்தையும் ரன் அவுட் செய்து ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இதனால் ஸ்டோக்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ், "மிகவும் சிறப்பான வெற்றி இது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நாங்கள் இதே மைதானத்தில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றோம். அந்தப் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்."
"இதனால் எனக்கு ஒரு உள்ளுணர்வு தோன்றியது. இன்றைய ஆட்டத்திலும் ஆர்ச்சர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது. இதன் காரணமாக நான் காலையிலே ஜோப்ரா ஆர்ச்சர் கையில் பந்தை கொடுக்க முடிவெடுத்தேன். நேற்று பிரைடன் கர்ஸ் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்த பிறகும் எனக்கு ஜோப்ரா ஆர்ச்சர் தான் காலையில் பந்து வீச வேண்டும் என்று உள்ளுணர்வு இருந்தது."
"சில சமயம் நமது உள்ளுணர்வு சிறப்பாக செயல்படும். ஆர்ச்சர் அணிக்கு திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவருடைய பந்துவீச்சு ஆட்டத்துக்குள் வந்தவுடன் மிகப்பெரிய மாற்றத்தை போட்டி சந்தித்தது. எங்களுக்கு மிகவும் முக்கியமான விக்கெட்டுகளை அவர் வீழ்த்திக் கொடுத்திருக்கின்றார்."
"நாட்டுக்காக பந்துவீசி விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை தேடி தருவது என்பது மிகவும் உன்னதமான விஷயம். சோயிப் பஷிருக்கு ஒரு கை உடைந்து இருந்தது. அதையும் மீறி அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் ஈடுபட்டார். ஆல்ரவுண்டராக எனக்கு டெஸ்ட் போட்டியில் நான்கு முறை அணியின் வெற்றிக்காக செயல்பட வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவும் வாய்ப்பு கிடைக்கும்."
"அதை தவறவிட்டால் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் நான் ரிஷப் பண்டை ரன் அவுட் செய்ததும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நான் பந்து வீசிய உத்வேகத்துடன் பில்டிங்கில் நின்று கொண்டிருந்ததால் என் கைக்கு பந்து வந்தவுடன், நான் ரிஷப்பை ரன் அவுட் செய்தேன். பண்ட் எவ்வளவு பெரிய அபாயகரமான வீரராக இருப்பார் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவரை ஆட்டம் இழக்க வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அடுத்த நான்கு நாட்கள் ஓய்வில் இருப்போம். அதன் பிறகு நான்காவது டெஸ்டுக்கு தயாராகுவோம்" என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.