மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 5) இரவு ஏழு மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டிக்காக இரு அணி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த "டேட்டா அனலிசிஸ்" (Data Analysis - தரவுப் பகுப்பாய்வு) மற்றும் வீடியோக்களைத் தங்கள் அணி பெரிதும் நம்பியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, தற்போது சொந்த மண்ணில் சிறப்பான ஃபார்மில் உள்ள இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், இந்திய அணிக்கு எதிரான தங்களது திட்டங்கள் குறித்துப் விரிவாகப் பேசினார்.

இது குறித்துப் பேசிய அவர், "எங்களிடம் இந்திய வீரர்கள் குறித்த நிறைய தரவுகள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. இந்திய பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் எந்தப் பகுதியில் பந்தை அடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும், எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முடிந்தவரை அதிக நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் எங்கள் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதே எங்களது முக்கியத் திட்டமாகும். இந்திய அணி மிகச் சிறந்த அணி என்பதோடு, வெவ்வேறு பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்ளும் திறனும் அவர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதே எனது பணியாகும்," என்று ஹாரி புரூக் கூறினார்.
இங்கிலாந்து அணி தனது கடந்த மூன்று போட்டிகளையும் இலங்கையில் உள்ள பல்லேகலே மற்றும் கொழும்பு மைதானங்களில் விளையாடியது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான அந்த ஆடுகளங்களில் விளையாடிவிட்டு, தற்போது வேகத்திற்கும் பேட்டிங்கிற்கும் சாதகமான மும்பை வான்கடே மைதானத்திற்கு அந்த அணி திரும்பியுள்ளது.
நடப்புத் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இதே மைதானத்தில்தான் நேபாள அணி இங்கிலாந்துக்குக் கடும் சவால் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆடுகளத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு உள்ளது.

இந்திய அணியின் பலமான பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். நடப்புத் உலகக்கோப்பை தொடரில் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கத் தடுமாறி வரும் மூத்த தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஃபில் சால்ட் ஆகியோர், இந்த முக்கியமான அரையிறுதியில் தங்களது பழைய ஃபார்முக்குத் திரும்ப வேண்டும் என இங்கிலாந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இன்று இரவு நடைபெறும் இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.