மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹாரி புரூக் தான் செய்த தவறு ஒன்றுதான் தோல்விக்கு காரணம் என போட்டி முடிந்த உடன் வேதனையுடன் குறிப்பிட்டார். .
இந்தப் போட்டியில் 254 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி குறித்தும், இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் குறித்தும் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஆட்டத்தின் முடிவுக்குப் பிறகு பேசிய ஹாரி புரூக், முதலில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைக்கும் என்றும், சுழற்பந்து வீச்சு எடுபடும் என்றும் கணித்திருந்தோம். ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு முழுமையாக சாதகமாக மாறிவிட்டது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆட்டத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு சஞ்சு சாம்சனின் கேட்ச்சை தவறவிட்டதுதான். கேட்சுகள் தான் ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற பழைய பழமொழி ஒன்று உண்டு. இன்று ஃபீல்டிங்கில் எங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் இல்லை. கேட்ச்சை விட்டது எங்கள் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது," என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஹாரி புரூக் தவறவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டிய ஹாரி புரூக், உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையை இந்திய அணி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். "இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டனர். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராகப் பந்துவீசும்போது சிறிய தவறு செய்தாலும் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றுவிடும். இன்று அதுதான் நடந்தது" என்று அவர் கூறினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 61 ரன்களையும், சாம் கர்ரன் 53 ரன்களையும் வாரி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் 254 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஜேக்கப் பெத்தேல் தனி ஒருவனாகப் போராடினார். அவர் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது ஆட்டம் குறித்துப் பேசிய புரூக், "பெத்தேலின் ஆட்டம் நம்ப முடியாத அளவிற்குச் சிறப்பாக இருந்தது. முதல் பந்திலிருந்தே அவர் ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தத் தோல்வியிலும் பெத்தேலின் சதம் எங்களுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய நேர்மறையான விஷயமாகும்" என்று மனதாரப் பாராட்டினார்.

தோல்வியடைந்தாலும் தமது அணி வீரர்களின் போராட்ட குணம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஹாரி புரூக் தெரிவித்தார். "250 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் மற்ற அணிகளாக இருந்தால் எளிதாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு சுருண்டிருப்பார்கள். ஆனால் எங்கள் அணி வீரர்கள் இறுதிவரை விடாமுயற்சியுடன் போராடினார்கள். 246 ரன்கள் வரை எடுத்து ஆட்டத்தை இறுதிவரை நெருக்கமாகக் கொண்டு சென்றது பெருமையாக உள்ளது. இந்தத் தொடர் முழுவதும் எங்கள் அணி விளையாடிய விதம் குறித்து நாங்கள் பெருமைப்பட வேண்டும்" என்று கூறினார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்.