ராஜ்கோட் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் முதல் வெற்றியை பெற்றிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், "எங்கள் அணி பவுலர்கள் இன்று மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். தங்களுடைய திறமையை இன்று அவர்கள் வெளிக்காட்டி இருக்கிறார்கள்".

" எங்கள் அணியில் ஆதில் ரசீத் மிகவும் முக்கியமான வீரராக இருக்கிறார். அவரிடம் நிறைய பந்துவீச்சு வகைகள் இருக்கின்றது. பந்தின் வேகத்தையும் மாற்றி வீசுவார். ஆதில் ரசித் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே நான் நினைக்கின்றேன். ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து அதிகம் பேச தேவையில்லை".
"எங்கள் அணியின் சூப்பர் ஸ்டார் அவர். தொடர்ந்து ஒரே மாதிரி அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் 60 ரன்களுக்கு சென்றால், அடுத்த நாளே அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து விடுவார். எங்கள் அணியின் தொடக்க வீரர் அதிரடியாக விளையாடக் கூடியவர். அவர் தனது வழக்கமான பேட்டிங்கை ஆரம்பித்து விட்டால் தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் கடினம்".
"இதனால் தான் தொடக்க வீரர் பணியை அவர் சிறப்பாக செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். கடினமான ஆடுகளத்தில் கூட அவர் அபாரமாக ரன்கள் சேர்த்தார். 170 ரன்கள் என்பது மிகவும் நல்ல இலக்காகவே நான் நினைக்கின்றேன். அதுவும் நாங்கள் 127 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்த போது 170 ரன்கள் தொடுவதெல்லாம் மிகவும் நல்ல விஷயம். இதில் கொஞ்சம் கூட எனக்கு ஏமாற்றம் இல்லை".
"ஆதில் ரசித்தும் மார்க் வுட்டும் கடைசி விக்கெட்டுக்கு சேர்த்த பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்களும் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டுகளை கொத்தாக இழந்தோம். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.இந்திய அணி பேட்டிங் செய்யும்போது அவர்களுடைய விக்கெட்டுகளை பவர் பிளேவில் எடுத்தது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது என்று நினைக்கின்றேன்" என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.