சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடிய போது கடைசி மூன்று ஓவர்களில் 20 ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிலை இருந்தது.
எனினும் திலக் வருமா மற்றும் ரவி பிஸ்னாய் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர்," இந்த ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்கான அனைத்து பாராட்டுக்களும் திலக் வருமாவுக்கே சேர வேண்டும்".

"நாங்கள் இன்றைய ஆட்டத்தில் பல வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். நாங்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டோம். எங்கள் அணியில் இருந்த அனைத்து வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நினைத்தபடி பேட்டிங்கில் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்".
"நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடினோம். இதை தான் நாங்கள் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களிடமும் எதிர்பார்க்கிறோம்.நாங்கள் அதிரடியாக ஆடியதால் ஒரு நல்ல இலக்கை எங்களால் எட்ட முடிந்தது. நாங்கள் விளையாடிய ஸ்டைலை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது".
"இந்த ஆட்டத்தில் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கிறது. ஜெமி ஸ்மித்அறிமுக ஆட்டத்தில் நன்றாக விளையாடியிருக்கிறார். இதேபோன்று பிரைடல் கார்ஸ் உள்ளிட்ட வீரர்களும் பல வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது".
"இன்னும் நாங்கள் பல விஷயங்களில் முன்னேற்றம் அடையலாம் என நினைக்கின்றேன். இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கின்றது. இந்திய வீரர்கள் மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். இதன் மூலம் நிச்சயம் விக்கெட்டுகள் விழும் என்பதையும் நான் அறிவேன். அவர்கள் விக்கெட்டுகள் எடுத்தாலும் நாங்களும் அதிரடியாக ஆட வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிளானாக இருந்தது" என ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.