கயானா: இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி வெளியேறி இருக்கிறது. இதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் எடுத்த தவறான முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது.
2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியின் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த சம்பவம் ரிப்பீட்டாகும் என்ற நம்பிக்கையில், மீண்டும் நடப்பு டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை எதிர்த்து களமிறங்கியது.

கயானா மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருந்ததால், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் நேரடியாக பவுலிங் செய்வதாக அறிவித்தார். ஒருவேளை மழை பெய்து ஆட்டம் பாதியில் முடிவடைந்தால், டிஎல்எஸ் விதி முக்கிய பங்கு வகிக்கும். இதனை கணக்கில் கொண்டே பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் கயானா மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
இதனையறிமால் பட்லர் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்திருக்க மாட்டார். இங்கிலாந்து பேட்டிங் மீதான நம்பிக்கையும், மழை வரும் என்ற எதிர்பார்ப்புமே அந்த முடிவுக்கு காரணம். ஆனால் போட்டியின் முடிவில் இரண்டுமே இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரை கைவிட்டது. அதுமட்டுமல்லாமல் பவுலிங்கின் போது பட்லர் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்துள்ளார்.
டாப்லீ பந்தில் விராட் கோலி போல்டாகி வெளியேறிய போதே, பிட்சில் பவுன்ஸ் இல்லை என்று ரசிகர்களுக்கே புரிந்தது. இதனால் ஸ்பின்னர்களுக்கு பிட்சில் மிகச்சிறந்த உதவி கிடைக்கும் என்று பட்லரும் அறிந்துள்ளார். இதன் காரணமாகவே அடில் ரஷித் பவுலிங்கை தொடர்ந்து லியம் லிவிங்ஸ்டனை பவுலிங் செய்ய அழைத்தார். ஆனால் பட்லர் இங்கு தான் தவறு செய்தார்.
அது என்னவென்றால் நட்சத்திர ஸ்பின்னரான மொயின் அலிக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணியில் 3வது ஸ்பின்னர் இருந்தும் பட்லர் பயன்படுத்த தவறியதே இந்திய அணி 171 ரன்களை குவிக்க காரணமாக அமைந்தது. ஏனென்றால் இந்த பிட்சில் நல்ல வேகத்தில் வீசினால் பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன்கள் சேர்க்க முடியும்.
அப்படிதான் சாம் கரண் மற்றும் ஜோர்டன் பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்தனர். அதேபோல் அக்சர் படேல் நிச்சயம் பவர் பிளேவில் அட்டாக்கில் வருவார் என்பதை அறிந்த பட்லர், அவர் வீசிய முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணியின் இறுதிப்போட்டி கனவை மொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்தது.