புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெரும் நிலையில் இருந்தது.
ஆனால் நடுவரிசை வீரர்கள் கொத்தாக தங்களது விக்கெட்டை இழந்ததன் மூலம் போட்டியை கோட்டை விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், சிவம் துபே கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது ஆட்டத்தையே மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக தொடங்கினோம். பவர் பிளேவில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இதைப் போன்று பேட்டிங் பவர் பிளேவிலும் நாங்கள் அதிரடியாக விளையாடி நல்ல நிலையில் இருந்தோம். இந்தப் போட்டியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று இருக்க வேண்டும்".
"நாங்கள் இந்த போட்டியில் பல நல்ல விஷயங்களை செய்தோம். ஆனால் சிவம் துபேவை முதல் பந்திலே அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. இதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு நல்ல ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டார்.
நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் வெற்றி பெற வேண்டிய நிலையில் தான் இருந்தோம்".
"ஆனால் முக்கிய கட்டத்தில் எங்களுடைய பேட்டர்ஸ்கள் தங்களது விக்கெட்டை இழந்து விட்டார்கள். இது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இந்த தொடரில் நாங்கள் பல நல்ல விஷயங்களை செய்தோம். நாங்கள் திட்டமிட்ட மாதிரி நன்றாக விளையாடினோம். இது போன்ற போட்டிகளில் நாங்கள் இன்னும் நன்றாக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அவ்வாறு செய்தால் நிச்சயம் நாங்கள் இன்னும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது" என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.