பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. முதல் இன்னிங்சில் அதிக ரன்களை குவித்ததால் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் ஒரு ஆபத்து காத்துக் கொண்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதாவது கடைசி மூன்று முறை இங்கிலாந்து அணி எதிரணியை 500 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டும், அதில் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் ஆபத்து நீங்க வில்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். கடைசியாக 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 553 ரன்களும், இங்கிலாந்து 539 ரன்களும் குவித்தது. இதனையடுத்து 2வது இன்னிங்சில் நியூசிலாந்து 284 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து 299 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதேபோன்று 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி 579 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 264 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதேபோன்று 2024-ம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் பாகிஸ்தான் முதலில் 556 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 823 ரன்கள் குவித்து அசத்தியது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 220 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து 500 ரன்கள் விட்டுக் கொடுத்தும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.