கயானா : டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை இரவு நடக்கவுள்ளது. கயானா மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அணிகளுக்கு இடையில் வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அதேபோல் டாப்லி, சாம் கரண், ஆர்ச்சர், ஜோர்டன் ஆகிய மூவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அடில் ரஷித்தை சுற்றி இயங்குவதால் ரன்களை கட்டுப்படுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் ஆர்ச்சர், ஜோர்டன் இருவரும் சொந்த மண்ணில் ஆடுவதால், எனன் லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்று தெரிந்துள்ளது.

இதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ரன்களை விட்டுக் கொடுக்காமல் சவால் அளிக்கின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் விராட் கோலி ஃபார்மில் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர்.
பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் விக்கெட் டேக்கர்களாக உள்ளனர். இவர்களின் பந்தில் ரன்கள் அடிப்பது எளிதாக இல்லையென்பதால், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை அட்டாக் செய்ய முயன்று பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர். டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
சமபலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியை எதிர்த்து அரையிறுதி சுற்றில் விளையாடுவதை இங்கிலாந்து அணி கிண்டல் செய்துள்ளது. இங்கிலாந்து அணியின் ட்விட்டர் பக்கத்தி, 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? என்று பதிவிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியிலும் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றதோடு, இறுதிப்போட்டியிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.