லண்டன்: இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. அந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி 19 வயது வேகப்பந்துவீச்சாளரான எடி ஜாக்கை அணியில் சேர்த்துள்ளது. இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் கே.எல். ராகுலின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடி ஜாக் ஆறடி நான்கு அங்குலம் உயரம் உடையவர். அந்தக் காரணத்தாலும், கே.எல். ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியதாலும் அவருக்கு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் சிக்கி இருக்கும் நிலையில், அவருக்கு மாற்று வீரராக இவர் முதல் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

எடி ஜாக் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் கே.எல். ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இவர் மிதமான வேகப்பந்துவீச்சாளர் ஆவார். ஹாம்ப்ஷயர் அணிக்காக இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 11 முதல் தர போட்டிகளிலும், மூன்று உள்நாட்டு டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடி இருக்கிறார். இன்னும் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடினார். அதில் இரண்டு போட்டிகளில் ஆடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் அண்டர் 19 அணியிலும் இடம் பெற்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் விளையாடி இருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணியில் மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆலி ராபின்சன், கஸ் அட்கின்சன் ஆகியோர் காயத்தில் சிக்கி இருப்பதால் அவர்களுக்கு மாற்று வீரராக எடி ஜாக் நிரந்தரமாக இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. முதல் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் விளையாடினால், நிச்சயமாக அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் அவர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை, முகமது ஷமி டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். பும்ரா இந்த டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என கூறி இருக்கிறார். அவர் மூன்று போட்டிகளில் தான் விளையாடுவார். இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களும் முழு பங்களிப்பை அளிக்க முடியாததால் இந்திய அணியின் பந்துவீச்சு சிக்கலான நிலையில் உள்ளது. தற்போது முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷத் கான் ஆகியோர்தான் 5 போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு உள்ள பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள்.